அரசுக்கு சவால் விடுத்து எதிரணி சாட்டையடி

Politics 2 ஆண்டுகள் முன்

banner

” மக்கள் ஆணைக்கு புறம்பாகவே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. எனவே, மக்களின் மனநிலைமை என்னவென்பதை அறிந்துகொள்வதற்கு மாகாணசபை அல்லது உள்ளாட்சிமன்றத் தேர்தலை அரசு நடத்த வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.





தொடர் விலை உயர்வு மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பு வருமாறு,





” நல்லாட்சியின்போது மேடைகளில் வெங்காயத்தை தூக்கி காண்பித்து ‘தெங் செபத’? (இப்போ சுகமா) என மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பினார். இன்று நூற்றுக்கு 85 வீதத்தால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது. இதற்கு மஹிந்த கூறும் பதில் என்ன?





உலக சந்தையில் விலை உயர்வு இடம்பெறும்போது, நாட்டிலும் அதிகரிப்பு இடம்பெறுகின்றதெனில் அரசு எதற்கு, அமைச்சரவை எதற்கு என விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் வினா தொடுத்தனர். தற்போது மௌனம் காக்கின்றனர். இதன்மூலம் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் புலப்படுகின்றது.





இன்று நாட்டில் அரசு செத்துவிட்டது. அமைச்சரவை செல்லாக் காசாகிவிட்டது. கறுப்புகடை வியாபாரிகளும், ஏனையோருமே தீர்மானம் எடுத்து, நடைமுறைப்படுத்துகின்றனர். மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களின் வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளது. வாழ்க்கைச்சுமை குறைக்கப்படும் என்ற உத்தரவாதம் மஹிந்த தரப்பால் வழங்கப்பட்டது. இன்று என்ன நடக்கின்றது? எனவே, மக்களின் நிலைப்பாட்டை அறிய தேர்தலொன்று அவசியம்.” – என்றனர்.