பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதா? நீதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

" பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றித் தவறாக யாராவது கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதி வழங்க ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். அவ்வாறு யாராவது தவறாக கைதாகியிருந்தால் இந்தக் குழுவில் முறையிடுவதன் மூலம் இந்தக் குழு அது தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைத்த பின்னர் ஜனாதிபதி அவ்வாறானவர்கள் தொடர்பில் முடிவெடுப்பார்.





இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை சமர்ப்பித்தும் பதிலளித்தும் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் கூறுகையில்,





"நீதித் துறையுடன் தொடர்புள்ள 60 அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முக்கியமான யோசனைகள். சமூக தளங்கள் தொடர்பில் மேற்பார்வை அவசியம் என பலரும் கருத்து முன்வைத்தனர்.





கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போட மாட்டோம். ஆனால் சமூக வலைத்தளங்களின் மூலம் குரோதத்தை வளர்க்க இடமளிக்க முடியாது. பொய்யான விடயங்களை முன்வைத்தால் வழக்குத்தொடரக் கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் உரிமை தொடர்பில் விடயங்கள் உள்ளடக்க வேண்டும்.





பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகள் கருத்துக்களை முன்வைத்தார்கள். இது தொடர்பில் பரவலாக ஆராயப்படுகிறது.எனது கோரிக்கைக்கு அமைவாக 41 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளார். யாராவது தவறாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் இந்தக் குழுவுக்கு தெரிவிக்கலாம். இந்தக் குழு ஆராய்ந்து ஜனாதிபதிக்கு பரிந்துரை முன்வைக்கும். 46 பேர் தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து முடிவெடுப்பார்.





பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் மீளாய்வு செய்ய ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கு குந்தகமற்ற நாட்டுக்கு உகந்த சட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





சில வழக்குள் மீளப் பெறப்படுவது தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான வழக்கு கடந்த ஆட்சியில் மீளப் பெறப்பட்டது. சாட்சி இன்றி அரசியல் நோக்கில் முன்வைக்கப்படும் வழக்குகளை இவ்வாறு மீளப் பெற நேரிடும். வழமையானது.





கடந்த ஆட்சியில் ஆட்களை தெரிவு செய்து எதிராக வழக்க தொடரப்பட்டது. வேறு நோக்கங்களுக்காகவே வழக்குத் தொடரப்பட்டது. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக உங்கள் ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. சாட்சி இன்றி வழக்கு மீளப்பெறப்பட்டது. நாம் இவற்றில் எந்தத் தலையீடும் செய்வதில்லை. பஸில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் திவிநெகும திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டது. இவற்றில் ஒரு சதமாவது முறைகேடாக பணம் பெற்றதாக கிடையாது. அவ்வாறான வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுவது சாதாரணமானதே. நீதிமன்ற சுதந்திரத்தில் தலையீடு செய்ய மாட்டோம் .





இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் நோக்கம் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடாது என்பதே" - என்றார்.