சிவப்பு எச்சரிக்கையை விடுத்து போருக்கு தயாரானது சு.க.!

banner

" அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஆட்சி கட்டமைப்பே ஸ்தம்பிக்கும் நிலைமை உருவாகும். எமது வெளியேற்றம் சாதாரண சம்பவமாக இருக்காது. சாதாரண பெரும்பான்மையைக்கூட அரசு இழக்க நேரிடும் " - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.





கட்சி மறுசீரமைப்பு, எதிர்கால அரசியல் நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.





சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் மஹிந்த சமரவீர கூறியவை வருமாறு,





" அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்படவில்லை. எனினும், கட்சி அவ்வாறானதொரு முடிவை எடுக்கும் பட்சத்தில் பதவிகளை துறந்துவிட்டு, வெளியேறுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.





நாம் நாட்டை ஸ்தீரமற்ற நிலைக்கு கொண்டுசெல்ல இடமளியோம். அதேபோல எமது முடிவு சஜித், ரணில் மற்றும் இதர தரப்புகளுக்கும் சாதகமாக அமைந்துவிடாது. அவர்களை பலப்படுத்த வேண்டிய தேவை எமக்கு இல்லை. அக்கட்சிகளுடன் இணையவும் மாட்டோம்.





விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில போன்றவர்களை ஆரம்பத்தில் வெளியேறுமாறு வலியுறுத்தினர். தற்போது சுதந்திரக்கட்சியை இலக்கு வைத்துள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் ஜனாதிபதியை பலவீனப்படுத்துவதற்கு முற்படுகின்றனரா என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டும்.





சுதந்திரக்கட்சி அரசிலிருந்து வெளியேறினால் மொட்டு கட்சியில் உள்ளவர்களும் வெளியேறுவார்கள். நாம் வெளியேறும் நாளில் எண்ணிக்கையை அறியலாம். வெளியேறுவதாக இருந்தால் வெறுமனே 14 பேர் மட்டும் வெளியேறமாட்டோம். அரசு மூன்றிலிரண்டு அல்ல சாதாரண பெரும்பான்மையைக்கூட இழக்கும்." - என்றார்.