மாகாண தேர்தல் எப்போது? வெளியானது விசேட அறிவிப்பு

Politics 2 ஆண்டுகள் முன்

banner

மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அறிவித்தது.





அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.





இதன்போது உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் நீடிப்பு மற்றும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண அரசின் மேற்படி நிலைப்பாட்டை அறிவித்தார்.





அவர் மேலும் கூறியவை வருமாறு,





" உள்ளாட்சி சபைகளின் பதவிகாலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இரு பிரதான விடயங்களைக் கருத்திற்கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதலாவது விடயம் சுகாதார பாதுகாப்பு.





அடுத்ததாக உள்ளாட்சி சபைகளின் பதவி காலத்தில் இரு வருடங்கள் கடந்த ஆட்சியின்கீழ் சென்றது. இதனால் உள்ளாட்சி மன்றங்களால் உரிய வகையில் செயற்படமுடியாமல்போனது. அடுத்த இரு வருடங்கள் கொரோனா பாதிப்பு. எனவே, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கு சேவையை வழங்குவதற்கு காலம் வழங்க வேண்டும். அந்தவகையில்தான் பதவி காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.





மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டம் கடந்த ஆட்சியின்போதுதான் திருத்தப்பட்டது. எனவே, அதனை மீண்டும் திருத்ததாது தேர்தலை நடத்துவதில் சிக்கல் நிலைமை உள்ளது. இது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. இதன்படி இந்த வருடத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்." - என்றார்.