நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து! பிரிட்டிஷ் பிரதமரின் பதவிக்கு ஆப்பு?

banner

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல கத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது.





அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன் சன் முதல் முறையாகத் தனது மன்னிப்பை வெளியிட்டிருக்கிறார்.





உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே
பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப் புக்கொண்டிருக்கிறார். நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதற் காகவே தொழில் முறையான அந்தக் கூட்டத்துக்குத் தான் அழைப்பு விடுத்தி ருந்தார் எனவும், விருந்து நடைபெற்ற பூங்கா தனது பணியிடத்தின் ஒரு நீட்சியே என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.





கடந்த ஆண்டு மே மாதம் நாடு முதலாவது முடக்கத்தில் இருந்த சமயத்திலேயே "நம்பர் 10, டவுணிங் வீதி"அலுவலகத்தின் பூங்காவில் பலர் ஒன்று கூடிய குடிபான விருந்து நடந்தது. பிரதமர் ஜோன்சன் அவரது துணைவியார் உட்பட முப்பது
பேர் அதில் பங்குபற்றினர் என்பதைச் சாட்சிகள் உறுதி செய்துள்ளன.வெளி இடங்களில் ஒருவருக்கு மேல் ஆட்கள்
கூடுவதுகூடத் தடுக்கப்பட்டிருந்த- மிக இறுக்கமான- கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தனது அலுவலகத்துக்கு வருமாறு
பலரை அழைத்ததைப் பிரதமர் ஒப்புக் கொண்டிருப்பதால் அந்தத் தவறுக்காக அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன.





எனினும் அவரது அமைச்சரவை அவருக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.பிரதமரது அலுவலகத்துக்கு வெளியே
சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகை களுடன் கூடியுள்ளனர். அங்கு விருந்து நடைபெற்ற மே மாதத்தில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் சிலரின் உறவினர்களது கருத்துக்களை பிபிசி ஒளி பரப்பியுள்ளது.





நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜோன்சன்"சட்டத்தை மீறிவிட்டார்,பொய் கூறி விட்டார், தனது அலுவலகத்தை இழிவுபடுத்திவிட்டார்" என்று கோஷம் எழுப்பினர்.





"நாங்கள் ஒக்சிஜன் கருவிகளைப் பொருத்திக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் கூடிக் குலவிக் குடிபானம் அருந்திக் கொண்டிருந்தனர்" என்று மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியதை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.





அலுவலகத்தில் விருந்து நடந்தது என்ற குற்றச்சாட்டு வெளியாகிய ஆரம்பத்தில் அதனைத் தொடர்ந்து மறுத்துவந்தவர் பொறிஸ் ஜோன்சன். ஏழு, எட்டு மாதங்கள் கடந்து இப்போது அவர் அதனை ஒப்புக்கொண்டிருப்பது அரசியலில் அவரது நிலையை மிகவும் பலவீனப்படுத்தியிருக்கிறது.





பொறிஸ் ஜோன்சன் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த மற் ஹான்கொக் (Matt Hancock) கொரோனா சுகாதார விதி களை மீறிப் பெண் ஒருவரை முத்தமிடு கின்ற கண்காணிப்புக் கமெரா காட்சி வெளியாகியதை அடுத்துக் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





பாரிஸிலிருந்து குமாரதாஸன்