'புலிகளின் தாக்குதலை தடுக்க கையாளப்பட்ட வியூகம்'
Politics 2 ஆண்டுகள் முன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவே திருகோணமலை எண்ணெய் குதங்களை அன்று நாம் இந்தியாவுக்கு வழங்கினோம். அது தந்திரோபாய ரீதியில் எடுக்கப்பட்ட முடிவாகும் - என்று எதிரணி பிரதம கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனாலும் நெருக்கடியான கட்டங்களில் அவ்வாறு இடைநிறுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கையில் நாடாளுமன்றத்தை மூடி ஆட்சியாளர்கள் என்ன செய்தனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், திருகோணமலையில் உள்ள எண்ணெய் குதங்களில் 80 ஐ இந்தியாவுக்கு விற்பனை செய்துவிட்டனர் எனவும், தமது ஆட்சியில் தேசிய வளங்கள் பாதுகாக்கப்படும், நல்லாட்சியின்போது விற்கப்பட்ட வளங்கள்கூட மீளப்பெறப்படும் என உறுதிமொழி வழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள், திருட்டுத்தனமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கிரியல்ல விசனம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, 2003 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் 10 எண்ணெய் குதங்கள்தான் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதி அது. எனவே, இந்தியாவுக்கு வழங்கினால் அங்கு புலிகள் தாக்குதல் நடத்தமாட்டார்கள். புலிகளின் தாக்குதலை தடுக்கவே எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. அந்த முடிவில் தந்திரோபாயம் இருந்தது." - எனவும் குறிப்பிட்டுள்ளார் கிரியல்ல.
Related Posts