'கூட்டு பொறுப்பைமீறும் விதத்தில் செயற்படக்கூடாது'

banner

" அரசின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு பங்காளிக்கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால் அந்த உரிமையை பொருத்தமான இடத்திலேயே பயன்படுத்த வேண்டும்." - என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக்கொண்ட கட்சிகள், பொதுவானதொரு இலக்கை அடைவதற்காக, பொதுவானதொரு வேலைத்திட்டத்தின்கீழ் இணைவதுதான் கூட்டணி அரசாகும். அங்கு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் இருக்க வேண்டியது ஜனநாயகப் பண்பாகும். பயணம் தவறெனில் அதனை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு பங்காளிகளுக்கு இருக்கின்றது.





அதற்காக 'மைக்' கிடைக்கும் இடங்களில் எல்லாம் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கூட்டம் நடைபெறும். அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெறும். அப்போது விமர்சனங்களை முன்வைக்கலாம். தவறுகளை சுட்டிக்காட்டலாம்.





அதனைவிடுத்து கூட்டு பொறுப்பைமீறும் வகையில் பொதுவெளியில் விமர்சங்களை முன்வைப்பது ஏற்புடைய நடவடிக்கை அல்ல." - என்றார்.