டில்லியிடம் மேலதிக உதவி - இ.தொ.காவை களமிறக்கினார் ரணில்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த காலங்களில் இந்தியத் தூதரகத்தின் ஊடாக இலங்கைக்குப் பல்வேறு உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரான பாரத் அருள்சாமி ஆகியோர் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இந்தச் சந்திப்பின்போது இ.தொ.கா. நன்றி தெரிவித்துள்ளதுடன், தற்போதைய இக்கட்டான சூழ்சிலையில் இருந்து இலங்கை மீண்டெழ இந்திய அரசின் ஒத்ழைப்பும் உதவியும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.
அதேபோன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்தியா அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்பதுடன், இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து விதத்திலும் இந்திய அரசு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் இந்தச் சந்திப்பில் இ.தொ.கா., இந்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்குச் சாதகமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் என்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Related Posts