மாகாண தேர்தலை நடத்த இந்தியாவின் அழுத்தம் அவசியம்!

Politics 1 வருடம் முன்

banner

மாகாணசபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை அரசுக்கு, இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.





தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (29) மாலை கொழும்பில் நடைபெற்றது.





தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் மயில்வாகனம் உதயகுமார் ஆகியோர், கூட்டணியின் செயலாளர் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.





இதன்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நிலைவரம், மலையக மக்களுக்கான உதவித் திட்டங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.





இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா, பொருளாதார ரீதியில் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்த முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகள், இலங்கை மக்களுக்கான இந்திய உதவிகள் தொடர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.





அத்துடன், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு, தம்மால் முடிந்த அழுத்தத்தை இந்தியா பிரயோகிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.





இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,





" வடக்கு , கிழக்கு உட்பட 9 மாகாணசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியிடம் இல்லை. எனவே, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இதற்கான நிதி பங்களிப்பை தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும்.





இலங்கையின் தற்போதைய அரசுமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. தேசிய மட்டத்திலான தேர்தலை நடத்தி மக்களின் மனநிலையை அறிய ஜனாதிபதியும் தயாராக இல்லை.





எனவே, 9 மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்மூலம் மக்கள் ஆணையை அறியலாம். ஜனாதிபதி தரப்புக்கு மக்கள் ஆணை வழங்கினால் அவர் பதவி தொடரலாம். இல்லையேல் வெளியேற வேண்டும்." - என்றார்.