ஜோசப் ஸ்டாலினுக்காக யாழில் இன்றும் போராட்டம்!

banner

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.





மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்டச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய், ஸ்ரீலங்கா அரசின் பாசிசவாதத்தை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம் போன்ற பதாகைகளைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.





இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.