46 தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை - விக்கி நம்பிக்கை
சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதியளித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
" இந்த 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இச் சிறைக்கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக நீதியமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாரென்றும்." சி.வி. விக்னேஸ்வரன் கூறினார்.
Related Posts