நடுவானில் விமான கதவை திறக்க முற்பட்ட நபரால் பரபரப்பு: சிட்னி நீதிமன்றில் பிணை மறுப்பு!
மலேசியாவில் இருந்து சிட்னி நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முற்பட்ட ஜோர்தான் நாட்டு பிரஜையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏர் ஏசியா விமானம், மலேசியா, கோலாலம்பூரில் இருந்து சிட்னியை நோக்கி சனிக்கிழமை பயணித்துக்கொண்டிருந்தது.
இதன்போது குறித்த நபர் விமானத்தின் கதவுகளை திறக்க முற்பட்டவேளை, சக விமான பணியாளர்கள் அவரை விமானத்தின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்றனர் . அவ்வேளையில் விமான பணியாளர் ஒருவரை அவர் தாக்கியுள்ளார்.
சிட்னியில் விமானம் தரையிறங்கியதும், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை, விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் உயர்மட்ட சந்திப்புக்காக வந்த நபர் எனவும், குற்றப் பின்னணி அற்றவர் என்பதால் நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணி பிணை கோரினார். எனினும், பிணை மறுக்கப்பட்டது.
எதிர்வரும் புதன்கிழமை சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் அவரை மீண்டும் முற்படுத்த வேண்டும்.
ஜோர்தான் நபர் இழைத்த குற்றங்களிற்காக பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.