தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸாரால் இந்தியயொருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. 42 வயதான கௌரவ் குந்தி என்ற இந்தியர், அடிலெய்டு வைத்தியசாலையில் உயிருக்கு போராடிவருகின்றார்.
கடந்தவாரம் பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்ட பிறகே, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டியை கைது செய்யும்போது அவரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தி பொலிஸார் கொலை செய்தனர். இச்சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடிலெய்டு சம்பவத்தை இந்திய ஊடகங்கள் மேற்படி சம்பவத்துடன் ஒப்பிட்டுள்ளன.
கைது செய்யப்படும்போது கொடூரமாக நடத்தப்பட்டார் என்ற தகவல் இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. எனினும், இக்கருத்தை தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் மறுத்துள்ளனர்.
அத்துடன், இது இனவெறி செயற்பாடு அல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கௌரவ் குந்தி கைது குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும், விசாரணையின் முடிவு வரும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும், மேலும் கேமரா காட்சிகளை குடும்பத்தினருக்கும் அவர்களின் சட்டப் பிரதிநிதிகளுக்கும் வெளியிட வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகம் வலியுறுத்தியுள்ளது.
உள்ளக விசாரணை இன்னும் முடிவடையவில்லை என காவல்துறை தகவல் தெரிவிக்கின்றது. இச்சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு போராட்டம் நடத்துவதற்கு இந்திய சமுகத்தினர் தயாராகிவருகின்றனர் எனக் கூறப்படுகின்றது.