7 வருடங்களுக்கு பிறகு மனிதாபிமான விசா கிடைக்கப்பெற்று ஆஸ்திரேலியா வரவிருந்த நபரொருவர், ஈரான் போரில் சிக்கிக்கொண்ட விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலி என்பவர் ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையில் சேவையாற்றியுள்ளார். 2009 முதல் 2011 வரை ஆப்கானிஸ்தானில் இருந்த ஆஸி. படையில் இவர் சேவையாற்றினார். பின்னர் 2012 முதல் 2013 வரை இராணுவத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் செயற்பட்டார்.
அவர் ஆஸ்திரேலியாவில் மனிதாபிமான விசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஈரான் சென்றார். அவருக்கு மே மாதம் விசா அங்கீகரிக்கப்பட்டது.
எனினும், இஸ்ரேலுடனான போர் காரணமாக தமது நாட்டு வான் எல்லையை ஈரான் மூடியுள்ளது. இதனால் அவர் ஆஸ்திரேலியா வரமுடியாமல் பரிதவிக்கின்றார்.
தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் போர் வலயத்தில் சிக்கிக்கொண்ட அவர், தம்மை ஆஸ்திரேலியா மீண்டெடுக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
தாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும், எனவே, ஆஸ்திரேலியா உதவ வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.