சிட்னி பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக சைபர் தாக்குதல் மேற்கொண்டுவந்த அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதல் இத்தகைய இணைய குற்றங்கள் இடம்பெற்றுவந்துள்ளன என்று தெரியவருகின்றது.
அங்கீகரிக்கப்படாத இணைய சேவை அணுகல், தரவு வெளியேற்றம், பல்கலைக்கழக கட்டமைப்பை தவறாக பயன்படுத்தல், மாணவர்களின் தகவல்கள் விற்பனை போன்ற நடவடிக்கைகள் இதன்மூலம் இடம்பெற்றுவந்துள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் 27 வயது யுவதி ஒருவரை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து கணினி மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் பின்னர் அவர்மீது 20 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர் சைபர் தாக்குதல் மூலம் தனது பெறுபேறுகளைக்கூட மாற்றியுள்ளார் என தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.