ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ்மீது சைபர் தாக்குதல் நடத்திய தரப்புகள் தொடர்பில் விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன், சைபர் தாக்குதலில் 6 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் குவாண்டாஸ் நிறுவனத்தின் பிரதானி, வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சைபர் குற்றவாளி மேற்படி நிறுவனத்தின் வாடிக்கையாளர் அழைப்பு மையத்தை குறிவைத்து மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர் சேவை தளத்தை அணுகியே தரவுகளை களவாடியுள்ளார்.
வாடிக்கையாளர்களின் பெயர்கள், மின்அஞ்சல் முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், பயண நிகழ்ச்சி நிரல் மற்றும் பிறந்தநாள் தொடர்பான விவரங்களே களவாடப்பட்டுள்ளன.
கடன் அட்டை மற்றும் தனிப்பட்ட நிதி தொடர்பான தகவல்கள் தரவு கட்டமைப்பில் சேமிக்கப்படவில்லை எனவும், அவை திருடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் முதலிடப்பட்டுள்ளன. எனினும், அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே சைபர் குற்றவாளிகள் ஊடுறுவியுள்ளனர் எனவும் குவாண்டாஸ் நிறுவனத்தின் பிரதானி சுட்டிக்காட்டினார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரிக்க கூட்டாட்சி அரசாங்கத்துடன் விமான நிறுவனம் இணைந்து பணியாற்றிவருகின்றது.
அத்துடன், சைபர் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் குவாண்டாஸ் தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.