சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் (26) போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் , அதற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் நடைபெற்ற மேற்படி போராட்டங்களில் அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வடக்கு- கிழக்குச் சமூக இயக்கத்தின் ஏற்பாட்டிலேயே போராட்டங்கள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழிப் பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்துக்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பஸ் நிலையத்துக்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப் பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும், திருகோணமலையில் சிவன் கோயில் முன்பாகவும் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.