யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின்போது 11 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 21ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின்போது 11 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 9 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 101 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 90 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்கள் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.