அரை முழத்திற்கும் குறைவாக மல்லிகைப் பூவை கொண்டு சென்ற பிரபல தென்னிந்திய நடிகைக்கு ஆஸ்திரேலிய விமான நிலைய நிர்வாகம் ஆயிரத்து 980 டொலர்கள் அபராதம் விதித்துள்ளது.
மலையாள திரையுலகத்தைச் சேர்ந்த நடிகை நவ்யா நாயர் தமிழ் மொழியிலும் 5 இற்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு வந்துள்ளதுடன், இதற்காக அவர் சுமார் 15 சென்றி மீற்றர்அளவு கொண்ட மல்லிகைப்பூவை கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் நடிகை நவ்யாவின் உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள் அதில் மல்லிகைப்பூ இருப்பதை கண்டறிந்ததையடுத்து அவருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விக்டோரியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது தந்தை தனக்கு மல்லிகைப்பூ வாங்கித் தந்ததாகவும் அதை இரண்டாக பிரித்து ஒரு பாதியை கொச்சியில் இருந்து சிங்கப்பூர் வரை தனது தலையில் வைத்திருந்ததாகவும் மீதி பாதியை தனது கைப்பையில் வைத்திருந்ததாகவும் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் மிகவும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. அவற்றின்படி, மல்லிகைப்பூ அல்லது வேறு எந்தப் புதிய தாவரப் பொருட்களையும் விமானத்தில் கொண்டு செல்வதற்கு பொதுவாக அனுமதி இல்லை.
வெளிநாடுகளில் இருந்து வரும் பூக்கள் அல்லது தாவரங்களில், ஆஸ்திரேலியாவில் இல்லாத பூச்சிகள், நோய்க் கிருமிகள் அல்லது களை விதைகள் போன்றவை இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
இந்த விதிமுறைகளை மீறி பூக்களைக் கொண்டு சென்றால், அவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.