“செனட்டர் ஜசிந்தாவின் கருத்து இந்தியர்களை வெகுவாக பாதித்துள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்’’ - என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியர்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட கூற்றில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடியேறிய வெளிநாட்டவர்களில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.4 லட்சம் இந்தியர்கள் அங்கு வசிக்கின்றனர். இதுதவிர, ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதற்கு எதிராக, நாடு முழுவதும் ‘மார்ச் பார் ஆஸ்திரேலியா' என்ற பெயரில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் லிபரல் கட்சி கட்சியின் செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ்,
“பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான லேபர் கட்சி, வாக்கு வங்கிக்காக இந்தியர்களை அதிக அளவில் குடியேற அனுமதிக்கிறது’’ என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இவரது இந்தக் கருத்து ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜசிந்தா மன்னிப்பு கோர வேண்டும் என அவருடைய கட்சியினர் உட்பட பலர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கருத்து வெளியிடுகையில்,
“ஜசிந்தா தெரிவித்த கருத்தில் உண்மை இல்லை. அவருடைய கருத்து இந்தியர்களை வெகுவாக பாதித்துள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.