பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா, ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு சமாந்தரமான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என இரு பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனையை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், இது ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவான நிலைப்பாடு என குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், தங்களை தனி நாடாக அங்கீகரித்ததற்காக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.