இஸ்ரேல்- காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் ஹமாஸ் குழுவினர் நேற்று 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினருக்கும் இடையே 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 13-ம் திகதி எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை துறந்து காசா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும், காசா பகுதியை நிர்வகிக்க சர்வதேச அளவிலான ஒரு குழு உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட 20 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், காசா பகுதியை விட்டு வெளியேறுவது உள்ளிட்ட சில அம்சங்களை ஹமாஸ் ஏற்கவில்லை.
இந்நிலையில், ஒப்பந்தப்படி இஸ்ரேல் படையினர் வெளியேறியதும் காசா பகுதியை ஹமாஸ் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். சாலையில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, காசா பகுதியை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஆயுதம் ஏந்திய பாலஸ்தீனக் குழுக்களுக்கும் ஹமாஸ் குழுக்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 8 பேர் சாலையில் மண்டியிட்டிருக்க, ஹமாஸ் குழுவினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கின்றனர்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறும்போது, “ஹமாஸ் குழுவினர் மிகவும் மோசமான 2 குழுவின் உறுப்பினர்களை கொன்றுள்ளனர். இந்த செயல் என்னை பாதிக்கவில்லை. அதேநேரம் ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாங்கள் ஆயுதங்களை துறக்க வைப்போம். அது விரைவாக நடக்கும்” என்றார்.
இதனிடையே, ஒப்பந்தப்படி கொலை செய்யப்பட்ட இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடலை ஒப்படைக்கா விட்டால், காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்கள் செல்லும் வாகனங்களில் பாதியை அனுமதிக்க மாட்டோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஹமாஸ் குழுவினர் நேற்று முன்தினம் மேலும் 4 பிணைக் கைதிகளின் உடலை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். இதில் ஒருவரின் உடல் தங்களுடைய பிணைக் கைதி இல்லை என இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது.