கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
இரு பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் விளைவாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நிழல் உலக தாதா பூகுடு கண்ணா என்பவரின் சகா ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
காரொன்றில் வருகை தந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்துவது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. துப்பாக்கிசூட்டை நடத்திவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டனர்.
படுகாயமடைந்த நபர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 43 வயது நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
கொலையாளிகள் பயணித்த கார் கொழும்பு, ஆமர்வீதி பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
நிழல் உலக தாதா பூகுடு கண்ணா என்றழைக்கப்படும் புஷ்பராஜ் மற்றும் நிழல் உலக தாதா பழனி ரிபோஷன் ஆகிய இரு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் மோதலின் விளைவாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளது எனக் கூறப்படுகின்றது.
உயிரிழந்தவர் பூகுடு கண்ணாவின் சகாவென தெரியவந்துள்ளது. அவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவருகின்றது. காருக்குள் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
இக்கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வைத்து மூவர் கைதாகியுள்ளனர்.
இவ்வருடத்தில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 103 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 54 பேர் பலியாகியுள்ளனர். 56 பேர் காயமடைந்துள்ளனர்.