டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்தவேளையிலேயே இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தொழில் முயற்சிகள் அழிந்து போனமை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுப் போனமை, பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவை அழிவுன்டமைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த இக்கட்டான கட்டத்தில், ஆஸ்திரேலிய , இலங்கைக்கு வழங்கும் உதவிகள் மற்றும் நிவாரண சேவைகளுக்காக அனைத்து இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சி தலைவர் தூதுவரிடம் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.