ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று இரண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
இதில் தீவிரவாதி ஒருவரை தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அகமது அல் அகமது எனும் நபர் தடுத்துள்ளார். அவரது வீர தீர செயலுக்காக இப்போது உலக அளவில் பேசப்படுகிறார்.
துப்பாக்கியுடன் இருந்த தீவிரவாதியை லாவகமாக பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, அவரை தரையில் தள்ளினார் அகமது அல் அகமது.
அவரின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி, கவனம் பெற்றுள்ளது.
இருப்பினும் மற்றொரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு கை பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
43 வயதான அகமது அல் அகமது, சிட்னியில் பழக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்குதல் நடந்த போது சம்பவ இடத்தில் அவர் இருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே அவர் மறைந்து கொண்டார். தொடர்ந்து தீவிரவாதி ஒருவரை தடுத்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார்.
இதன் பின்னர் மற்றொரு தீவிரவாதி நடத்திய தாக்குதலில் அகமது அல் அகமது காயமடைந்தார். அவருக்கு கை பகுதியில் துப்பாக்கி தோட்டா பட்டதில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
‘மிகவும் தைரியமான நபர்’ என அகமதுவை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் பாராட்டி உள்ளார்.