உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கிடையிலான போர் முடிவுக்கு வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சாதகமாக முடிந்துள்ளது.
உக்ரைன், ரஸ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சு நடந்தது.
நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
இந்த சூழலில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இன்று ஜெலென்ஸ்கி சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஸ்ய ஜனாதிபதி புடினுடனும் டிரம்ப் தொலைபேசியில் பேசி இருந்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி,
“ உக்ரைன் ஜனாதிபதியுடன் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினோம். நாங்கள் நிறைய விடயங்ள் பற்றி விவாதித்தோம்.
அதேபோல புடினுடனான தொலைபேசி அழைப்பு சிறந்ததாக இருந்தது. அது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
புடினும், நானும் இப்போதுதான் ஐரோப்பிய தலைவர்களிடம் பேசினோம்... அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகக் கொடிய போராக இருக்கலாம்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன் ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில், “அனைத்து தலைப்புகளிலும் நாங்கள் சிறந்த விவாதங்களை நடத்தினோம்,
மேலும் இந்த சமீபத்திய வாரங்களில் அமெரிக்கர்களும் உக்ரைன் குழுக்களும் செய்த முன்னேற்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம். அமைதி கட்டமைப்பின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் விவாதித்தோம்.
20-அம்ச அமைதித் திட்டத்தில் 90 சதவீத ஒப்பந்தம், அமெரிக்க-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களில் 100 சதவீத ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க-ஐரோப்பா-உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிட்டத்தட்ட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
ராணுவ பரிமாணம் 100 சதவீதம் ஒப்புக் கொள்ளப்பட்டது. செழிப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.” -என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிக்கு ஆஸ்திரேலியா ஆதரவளித்துள்ளது.
இதற்கிடையில் தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு இடையிலான போர் நிறுத்தத்தையும் ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.