" 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது."
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
“இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து போராடிய படைவீரர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை.
புலிகளின் அச்சுறுத்தலையும் கருத்திற்கொள்ளாது போரை முடிப்பதற்கு இரு தமிழ்த் தலைவர்கள் உதவினார்கள். பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் புலிகளுக்கு எதிராக முன்னின்றவர்கள்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மஹிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்ட சமருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரு தமிழ் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.” – என அவர் மேலும் கூறினார்.