மெல்பேர்ண் தென்கிழக்கு பகுதியில் இஸ்லாமிய சமூகத் தலைவரொருவர் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டதாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் சமூகத் தலைவரும், அவரது மனைவியும் வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருக்கையில், மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவொன்று
அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது.
வாகனத்தை வழிமறித்து கீழ் இறக்கி, முஸ்லிம் விரோத சொற்பிரயோகங்கள் செய்யப்பட்டன என்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர்.
தமது காரை அந்த குழுவினர் சேதப்படுத்தினர் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
47 வயதான முஸ்லிம் சமூகத் தலைவர் ஒருவரே இந்த வன்முறை சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார் என விக்டோரியா மாநில இமாம்கள் சபை தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை விக்டோரியா மாநில பிரீமியர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.