இலங்கை கடல் எல்லைக்கு அருகில் போர்க் கப்பலொன்றே அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது என கடற்படை கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. விசாரணைகளின் பின்னரே அது பற்றி தெரியவரும் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே கடற்படை ஊடகப் பேச்சாளர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ அனர்த்தத்துக்கு உள்ளான கப்பலில் இருந்தவர்களின் உயிரைப் பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது. அதனை நாம் செய்தோம்.
அனர்த்தம் இடம்பெற்ற பகுதியில் இருந்து சில சடலங்களும் மீட்கப்பட்டன. கப்பலில் பயணித்தவர்களின் சடலமாக அவை இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். எனினும், விசாரணைகளின் பின்னரே அது பற்றி உறுதியாக தெரியவரும்.
இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள பகுதியிலேயே கப்பல் அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது.
அது இலங்கைக்குரிய எல்லை அல்ல என்றபோதிலும் அப்பகுதியில் ஏதேனும் அனர்த்தம் நடந்தால் மீட்பு பணியை முன்னெடுப்பதற்குரிய மனிதாபிமான கடப்பாடு இலங்கைக்கு உள்ளது. அதற்கமையவே நாம் செயல்பட்டோம்.
குறித்த கப்பல் எங்கிருந்து, எப்பகுதியை நோக்கிச் சென்றது, அதன் நோக்கம் என்ன என்பன பற்றிய தகவல்கள் விசாரணையின் பின்னரே தெரியவரும்.
அனர்த்தத்துக்கு உள்ளான கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்தாக வெளியாகும் தகவலை நிராகரிக்கின்றோம்.
அனர்த்தம் எவ்வாறு நடந்தது என்பதை உரிய தொழில்நுட்ப ஆய்வின் பின்னரே கண்டறிய முடியும். உயிர்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாக இருந்தது.
அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணி தொடர்கின்றது.” எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார்.