சிரியாவில் உள்ள அகதி முகாம்களில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். (ISIS) அமைப்புடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் இன்று ஆஸ்திரேலியாவை வந்தடைந்தனர்.
ஒரு குழுவினர் ஆஸ்திரேலிய நேரப்படி இன்று மாலை 5:30 மணியளவில் மெல்போர்ன் விமான நிலையத்திலும், மற்றொரு பெண்ணும் குழந்தையும் அடுத்த 15 நிமிடங்களில் சிட்னியிலும் தரையிறங்கினர்.
இவர்கள் அரசியல் வட்டாரங்களில் 'ஐ.எஸ். மணப்பெண்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். 2019-இல் ஐ.எஸ். அமைப்பின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரியாவில் உள்ள அல்-ரோஜ் (Al Roj) அகதி முகாமில் இவர்கள் சிக்கிக்கொண்டனர்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் இருந்து புறப்பட்ட 4 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் என மொத்தம் 13 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
இன்னும் 21 ஆஸ்திரேலியர்கள் அங்குள்ள முகாம்களில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியக் காவல்துறை கூறுகையில், "நாடு திரும்பியுள்ள பெண்கள் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்றமை மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடரும்" எனத் தெரிவித்துள்ளது.
இவர்கள் ஆஸ்திரேலியப் பிரஜைகள் என்பதால் இவர்களைத் தடுக்க முடியாது என்று அரசுத் தரப்பு கூறினாலும், இவர்களுக்கு எந்த உதவியும் செய்யப் போவதில்லை என ஆஸ்திரேலிய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும், நாடு திரும்பிய சிறார்கள் அனைவரும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.