“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“இராணுவத் தளபதியான எனக்குத் தெரியாமல், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவற்றுடன் ராஜபக்சக்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எரிக் சொல்ஹைமுடனும் கலந்துரையாடினார்கள். புலிகளின் சரணடைவு பற்றியே அவர்கள் பேசியுள்ளனர்.
புலிகளை முற்றாக ஒழிப்பதே எனது வியூகமாக இருந்தது. அவர்களைச் சரணடைய வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நான் சிந்திக்கவில்லை. அன்று புலிகளைச் சரணடைய அனுமதித்திருந்தால் பிரபாகரன் வட மாகாண முதலமைச்சர் ஆகியிருப்பார். அவ்வாறு இல்லையெனில் தெற்குக்கு வந்து அமைச்சராகக்கூட ஆகியிருக்கக்கூடும்.
போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாகச் சூளுரைத்த தலைவர்கள், கடைசி நேரம் வரை இப்படித்தான் செயல்பட்டார்கள். இதனை எம்மால் மறக்க முடியாது. நாட்டுக்காக இரத்தம் சிந்தியவர்கள் என்ற அடிப்படையில், இதுபோன்ற தலைவர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர நாம் தயாராக இல்லை” – என்றார் சரத் பொன்சேகா.