ஓக்டோபர் 07 தாக்குதல் சம்பவத்தின் பிரதான மூளையாளியெனக் கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் , காசாவில் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதை இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய ஆளில்லா விமானமொன்று, காசாவில் அவரின் உடலைக் கண்டுபிடித்துள்ளது. அப்படம் உள்ளிட்ட விடயங்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மேற்படி அறிவிப்பை இஸ்ரேல் விடுத்துள்ளது. டிஎன்ஏ பரிசோதனையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
80-களில் ஹமாஸ் இயக்கத்தில் சேர்ந்த யஹ்யா, அதன் இராணுவப் பிரிவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தார். கடந்த ஜூலையில் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டபிறகு ஹமாஸின் புதிய தலைவராக யஹ்யா பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ ஹமாஸ் அமைப்புக்கான அடுத்த கட்ட பதிலடியின் ஆரம்பமே இது " என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டுள்ளமையானது, உலகிற்கு ஒரு நல்ல நாள் என்றும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இது ஒரு நல்ல தருணம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஒக்டோபர் 07 தாக்குதலின் பிரதான மூளையாளியாக செயற்பட்ட யாஹ்யா சின்வார், இஸ்ரேல் மக்களுக்கு எதிராகவும், அமைதியை விரும்பும் மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டவர் எனவும், அவரின் மரணம் காசா போரில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பயணக் கைதிகள் விடுவிப்பு, போர் நிறுத்தம் உள்ளிட்ட விடயங்களுக்கும் அவர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், ஹமாஸ் அமைப்பின் தலைவரின் மரணம், காசா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சபா.தயாபரன்.