அதிகாரத்தைப் பயன்படுத்தி, மது விருந்துகள் மூலம் இரண்டு இளம்பூர்வக்குடி (Aboriginal) ஆண்களுக்கு பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை இழைத்த வழக்கில், ஆஸ்திரேலியாவின் புரூம் (Broome) பகுதிக்கான முன்னாள் கத்தோலிக்க ஆயர் (Bishop) கிறிஸ்டோபர் ஆலன் சாண்டர்ஸ் (76) குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜூரி விசாரணைக்குப் பிறகு, வியாழக்கிழமை அன்று அவர் மீது சுமத்தப்பட்ட 13 பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.
குற்றச்சாட்டுகள்: - 2008 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில், சம்மதமின்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உட்பட 13 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டுள்ளார். மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் 6 குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
அதிகார துஷ்பிரயோகம்: - 1996-இல் புரூம் பகுதியின் ஆயராகப் பொறுப்பேற்ற சாண்டர்ஸ், 13 பள்ளிகள் மற்றும் 9 பங்குப் பேரவைகளை (Parishes) நிர்வகித்து வந்தார். பழங்குடியின இளைஞர்களைக் கவர கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சொந்தமான இடங்களில் மது விருந்துகளை நடத்தி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
பதவி விலகல்: - 2020-இல் இந்தப் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து அவர் பணியில் இருந்து தற்காலிகமாக விலகினார். அதைத் தொடர்ந்து, 2021-இல் அவரது ராஜினாமாவை போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டார்.
மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பு மாறாவிட்டால், ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே பாலியல் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட மிக உயரிய பதவியிலிருந்த கத்தோலிக்க மதகுருவாக கிறிஸ்டோபர் சாண்டர்ஸ் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.