குயின்ஸ்லாந்தில் சட்டவிரோதமாக இயங்கும் "ரெபல்ஸ்" (Rebels) மோட்டார் சைக்கிள் கும்பலை இலக்கு வைத்து மாநிலம் தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 23 நபர்கள் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நேற்றைய தினம் கோல்ட் கோஸ்ட் முதல் கேர்ன்ஸ் வரை 25 இடங்களில் சோதனை வாரண்டுகளைப் பயன்படுத்தி பொலிஸார் சோதனைகளை நடத்தியதாக குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் குறித்த கும்பலின் அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட, மாற்றியமைக்கப்பட்ட அல்லது கருப்பு நிறப் புள்ளிகள் கொண்ட கோட்டுகளை (Vests) அணிந்திருந்த ரெபல்ஸ் குழுவின் உறுப்பினர்களை புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
அந்தக் கோட்டுகள் மாற்றியமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை அணிந்திருப்பவர்கள் ரெபல்ஸ் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அவை வெளிப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர். குயின்ஸ்லாந்தில், தடைசெய்யப்பட்ட சில கும்பல்கள் உட்பட "அடையாளம் காணப்பட்ட அமைப்புகளின்" லோகோக்கள் அல்லது முத்திரைகள் அடங்கிய ஆடைகள், நகைகள் அல்லது ஆபரணங்களை பொதுவெளியில் அணிவது சட்டவிரோதமானதாகும்.
29 முதல் 67 வயதிற்குட்பட்ட 23 நபர்கள் மீது, தடைசெய்யப்பட்ட பொருட்களை அணிந்திருந்தமை அல்லது வைத்திருந்தமை தொடர்பான 23 குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 44 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 10 பேர் ரெபல்ஸ் குழுவின் மூத்த உறுப்பினர்கள் என்றும், அவர்களில் மூன்று தலைவர்கள், ஒரு பொருளாளர், ஒரு செயலாளர் மற்றும் மூன்று மாநிலப் பிரதிநிதிகள் அடங்குவர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
துப்பறியும் சூப்பிரண்டன்ட் ட்ராய் புகாலஸ் (Troy Pukallus) கருத்து தெரிவிக்கையில், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை இலக்கு வைத்து ஒழிப்பதில் குயின்ஸ்லாந்து பொலிஸ் சேவை உறுதியுடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
"ரெபல்ஸ் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல் தங்கள் அமைப்பை பகிரங்கமாக வெளிப்படுத்துவதையும் விளம்பரப்படுத்துவதையும் தடுப்பதும், அதேவேளை உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதையும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என துப்பறியும் சூப்பிரண்டன்ட் புகாலஸ் கூறினார்.
"இத்தகைய மோட்டார் சைக்கிள் கும்பல்கள் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிகள், கொலை, தாக்குதல், கப்பம் கோருதல் மற்றும் குடும்ப வன்முறை உள்ளிட்ட தீவிரமான குற்றச் செயல்களுடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்து வருகின்றன. இந்தக் குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தல், பயம் மற்றும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மை நோக்கம்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சோதனைகளின் போது, பல ரெபல்ஸ் கோட்டுகள், துப்பாக்கிகள், ஆயுதங்கள், கொகேன் மற்றும் பிற போதைப்பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், பொலிஸார் ஒரு ஆயுத உரிமத்தை ரத்து செய்ததுடன், இருவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ்களையும் (Consorting notices) வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.