தமக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்தி மெல்பேர்ணில் உள்துறை அமைச்சு வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அகதிகளின் போராட்டம் இன்று நூறாவது நாளை எட்டியுள்ளது.
குறித்த போராட்டத்தை ஒடுக்குவதற்கு பல வழிகளிலும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தாலும், கைதுகள் இடம்பெற்றிருந்தாலும் நிர்ணயித்த இலக்கை அடையும்வரை போராட்டக்காரர்கள் ஓயவில்லை.
இன்று நூறு நாட்களை எட்டிய நிலையில், 24 மணிநேர தொடர் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
விசா இன்றி 12 வருடங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் பரிதவித்துவரும் அகதிகள் இணைந்தே இற்றைக்கு 100 நாட்களுக்கு முன்னர் இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் உரிய தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தமிழ் தேசிய செயற்பாட்டாளர் கொற்றவன் தெரிவித்தார்.
இறுதி தினமான இன்று போராட்டக்காரர்களால், பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
24 மணிநேர கவனயீர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு வந்தாலும், அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு விசா கிடைக்கும்வரை புதிய வழிகளில் போராட்டங்கள் தொடரும் எனவும் கொற்றவன் சுட்டிக்காட்டினார்.