"அமெரிக்காவுக்கு தேவையேற்பட்டால் காசா பகுதியை கைப்பற்றுவோம்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பேச்சு நடத்தினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இருவரும் போர் நிறுத்தம், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இச்சந்திப்புக்கு பின்னர், இஸ்ரேல் பிரதமர், டிரம்ப் இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப் ' தேவைப்பட்டால் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் எங்கள் நாட்டு இராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம்.
இது மத்திய கிழக்கு பகுதியில் அமைதி சூழலை உருவாக்கும். காசா பகுதியில் உள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அகற்றுவோம். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை உருவாக்குவோம்." -என்று குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனீ அல்பானீஸியிடம் வினவியபோது, அது தொடர்பில் கருத்து கூற மறுத்துள்ளார். பல முறை இது தொடர்பில் கேள்விகள் எழுப்பட்டபோதிலும் அது பற்றி அவர் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
எனினும், இரு நாடுகள் தீர்வுக்கான ஆஸ்திரேலியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதே தனது வேலை எனவும், அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்புகள் பற்றி கருத்து கூறப்போவதில்லை எனவும் அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ட்ரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பில் சவூதி அரேபியா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.