மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட, சிறப்பு நாடாளுமன்றக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்கு நாடாராளுமன்றம் நேற்று அனுமதி அளித்ததுள்ளது.
அதன்படி, இந்தக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 17 ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் பதவிக்காலம் நீடிப்பதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மாகாண சபைகள் மற்றும் தேர்தல் முறை குறித்து நியமிக்கப்பட்ட அக்குழுவின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டாம் என்றும், மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் குழுவின் பதவிக்காலத்தை நீடிப்பது, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான மக்களின் வாய்ப்பைப் பறிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கட்டத்தில் குழுவின் பதவிக்காலத்தை நீடிப்பது அல்ல, மாகாண சபைத் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவதே முக்கியம் என்றும், மக்களுக்கு அஞ்சாவிட்டால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறும் அவர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
முந்தைய தேர்தல் முறையின் கீழ் தேர்தல்களை நடத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்காகக் குழுவின் பதவிக்காலத்தை நீடிப்பது, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்கும், மக்களின் இறையாண்மையை மீறுவதற்கும் சமமாகும் என்றும், இது, ஜனநாயக விரோதச் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.