பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
“ தமிழ் மக்களுக்காகப் போராடி ஒரு அரசியல் தீர்வைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்டபோது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தப் பயங்கரவாத தடைச் சட்டம் அரசாங்கத்தினாலேயே ஒரு சட்டவிரோதமான, கொடூரமான, சட்டத்தின் ஆட்சியை மீறுகின்ற ஒரு ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கருத்து இலங்கை அரசினால் சர்வதேச மட்டத்தில் விசேடமாக ஐ.நா. பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோஷம் மேலோங்கி நிற்கின்றது. இது கையொப்பம் பெறும் போராட்டம் ஊடாகவும், வேறு வழிகளிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது எனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அவர் அதனைச் சொல்வதற்கு அரசியல் பின்னணிதான் காரணம். ஏனெனில் இதற்கு முதல் அவருடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் வடக்கு, கிழக்குக்கு வந்து சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று பேசியிருந்தார்.
ஆனால், தற்போது நீதி அமைச்சர் அந்த விடயத்திலிருந்து பின்வாங்குகின்றார். இதற்கு இனவாதம்தான் காரணம்.” எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.