" இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது. அதேபோல நாம் நாட்டை காட்டிக்கொடுக்கவும் இல்லை." என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எந்தவொரு நாடாலும் விலைக்கு வாங்க முடியாது இலங்கையின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இரு தரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.
இதன்போது பாதுகாப்புசார் ஒப்பந்தம் பற்றிய கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
" இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டது. அது பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமென தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் அமுலில் உள்ள உள்நாட்டு சட்டம் மற்றும் தேசியக் கொள்கை ஆகியவற்றுடன் முரண்படாத விதத்திலும், சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு எவ்வித தாக்கங்களும் ஏற்படாத வகையிலும் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும்போது தேசிய சட்டம், இராணுவ சட்டம், அரசுகளின் சுயாதீனம், ஆட்புல ஒருமைப்பாடு என்பன மீறப்படமாட்டாது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல உள்விவகாரங்களில் தலையிட முடியாது, ஐ.நா. மூலதர்மங்களுக்கு மதிப்பளித்தல் ஆகிய விடயங்களில் இரு தரப்பும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் தற்போதும் முப்படைகளுக்கிடையில் பயிற்சிகள் நடக்கின்றன. உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்குரிய ஒப்பந்தமே இது.
தகவல் பரிமாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது இந்தியாவே முன்கூட்டியே புலனாய்வு தகவலை வழங்கி இருந்தது. இதற்கு முன் இப்படியான ஒப்பந்தம் இருக்கவில்லை. அதனை நாம் கைச்சாத்திட்டுள்ளோம்.
ஆட்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் தகவல்கள் பரிமாற்றப்படும். இப்படியான விடயங்கள் மட்டுமே மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் நடைபெறும்.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் நிலப்பரப்பை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் என ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டோம். சீனாவில் பிரிவினைவாத பிரச்சினை ஏற்பட்டால்கூட சீனாவுக்கு எதிராக நாம் எமது நாட்டு நிலப்பரப்பை பயன்படுத்த இடமளிக்கமாட்டோம். இது எமது கொள்கை.
பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு சட்டமா அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார். முப்படைகளுக்கு அனுப்பட்டு யோசனைகள் உள்வாங்கப்பட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டன. பின்னர் அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.
எனவே, எமது நாட்டுபாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது. நாட்டுக்கு நன்மையே பயக்கும். இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவில்லை. தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அவற்றை பெறலாம். நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக உயிரை பணயம் வைத்து போராடியவர்கள் நாம். எனவே, எந்தவொரு நாடாலும் எம்மை விலைக்கு வாங்கவும் முடியாது. அடிபணிய வைக்கவும் முடியாது." -என்றார்.