ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்கலும் இல்லாமல் மிக இறுக்கமாக அனைவராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்கு எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் அமைப்புகளை ஓரிடத்தில் சந்தித்துப் பேசவுள்ளோம் என்று தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவரின் கட்சியின் தலைமைப் பணிமனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"2021 ஜனவரி மாதம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் கையொப்பமிட்டு ஐ.நா. மட்டத்தில் தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த் தேசத்துக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கான குற்றங்கள், போர்க் குற்றங்கள் என்பன எவ்வாறு கையாளப்பட வேண்டும் அதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கையின் சம்மதம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றும், ஆகவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது இலங்கை தொடர்பில் குற்றவியல் தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டு பாரப்படுத்தப்பட்டு முழுமையான சர்வதேச விசாரணை நடைபெறும் என்று வலியுறுத்திக் கடிதம் ஒன்றை எழுதினோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த போது தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள், செயற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு ஒரு கடிதத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் வழங்கினோம். அந்தக் கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கையொப்பமிட்டனர்.
அந்தக் கடிதம் வழங்கி அடுத்த வாரமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளரும் செம்மணி விவகாரத்தில் இலங்கை அரசிடம் அந்த விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரத்தைக் கூறி அதற்கு மேலதிகமாக ஒரு சில சர்வதேச தரப்புகளின் கண்காணிப்போடு செய்வதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கி இருக்கின்றார்கள். இது நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாடு. செம்மணியில் நடந்தது அநியாயம். இலங்கை அரசு இதனை மூடி மறைக்க முயற்சித்த நிலையில் எதேர்ச்சியாக தற்போது வெளிவந்திருக்கின்ற ஆதாரங்களை மூடி மறைக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் வழங்குகிறீர்கள் என்பதாகவே இந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.
இப்படிப்பட்ட தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காக எதிர்வரும் வாரத்தின் இறுதியில் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர்கள் அனைவரையும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களையும் மனித உரிமை அமைப்புகளையும் ஓரிடத்தில் சந்தித்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி எழுதிய கடிதத்தை எந்தவிதமான பின்வாங்கலும் இல்லாமல் மிக இறுக்கமாக அனைவராலும் கடைப்பிடிப்பதற்குரிய அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்குக் கூட்டம் ஒன்றை நடத்த நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்." - என்றார்.