அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால் இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு சுயாதீன மாகாணமாக உதயமாகிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் இலங்கை பெடரல் (சமஷ்டி) ராஜ்ஜமாகிவிடும். குறிப்பாக வடக்கு மாகாணசபை சுயாதீன சபையாக மாறும். அவர்களின் தேவைக்கேற்ப சட்டங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
இவ்வாறானதொரு நிலைமைக்கே பிரபாகரன் முயற்சித்தார். அதற்காக 30 வருடங்கள் போரிட்டார். போர் மூலம் அடைய முடியாமல்போனதை வேறு வழியில் அடைவதற்குரிய முயற்சியாகவே இது உள்ளது. எனவே, 13 ஐ அமுலாக்க கோரும் யோசனை சுயாதீன நாடான இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
வெளியக பொறிமுறையில் உள்ள அச்சுறுத்தலை நாம் உணரவேண்டும். அது எமது படையினருக்கு ஆபத்தாக அமையும்." - எனவும் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.