கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சவால்கள் மற்றும் எதிர்நோக்கிய வளர்ச்சி வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
கொழும்பு பாதுக்கவில் அமைந்துள்ள ஹரித்த அலங்கார மீன் உற்பத்தி பண்ணைக்கு அமைச்சர் சென்றிருந்தார். அங்கு அலங்கார மீன் உற்பத்தியை பார்வையிட்டதோடு, கலந்துரையாடலிலும் ஈடுப்பாட்டர்.
கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, அலங்கார மீன் உற்பத்தி துறையைச் சார்ந்த தொழில்முனைவோர் மற்றும் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
அலங்கார மீன் உற்பத்தி துறை, நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கக்கூடிய புதுமையான தொழில்துறையாக கருதப்படுகிறது. உலகளவில் அலங்கார மீன் சந்தைக்கு நிலவும் அதிகமான தேவை காரணமாக, இலங்கை அதில் முக்கிய பங்காற்றும் திறன் கொண்டது என்பதை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.
அலங்கார மீன் உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் நேரடியாக கலந்துரையாடி, தற்போதைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் நிலவும் சவால்கள், உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாடு, தரநிலைகள், மற்றும் சர்வதேச சந்தை அணுகல் குறித்த பிரச்சினைகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயற்கை வளங்களும் நீர்வளங்களும் பரவலாக காணப்படுவதால், அந்தப் பகுதிகளில் அலங்கார மீன் உற்பத்தி பண்ணைகளை ஆரம்பிக்க மிகுந்த வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான அரசாங்க ஆதரவுகள், பயிற்சி திட்டங்கள் போன்றவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அலங்கார மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையை தேசிய அளவில் மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த செயல் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைகளும் இடம்பெற்றன.