"கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். எனவே, ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள்."
- இவ்வாறு அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
"போரில் மரணித்த மாவீரர்களைத் தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்ற சில மாவீரர் துயிலும் இல்லங்களை இந்த மாத இறுதிக்குள் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன." - என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டைக் குட்டிச் சுவராக்கிய வங்குரோத்து அரசியல்வாதிகள் இணைந்து ஆட்சியைக் கலைக்கப் போவதாகக் கூக்குரல் இட்டு வருகின்றனர்.
நாட்டை 70 வருட காலத்துக்கு மேலாக சீரழித்த வரலாற்றை எமது தேசிய மக்கள் சக்தி அரசு மாற்றி அனைத்து இன மத மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு தாய் நாட்டைக் கட்டியெழுப்பி வருகின்றோம்.
கடந்த காலங்களில் குடும்பமாக நாட்டைச் சூறையாடியவர்கள் துரத்தப்பட்ட நிலையில் நேர்மையான ஓர் அரசியல் கலாசாரத்தை எமது அரசு முன்னெடுத்து வருவதைச் சகித்துக்கொள்ள முடியாத கூட்டம் இனவாதத்தைத் தூண்ட முனைகின்றது.
போரில் மரணித்த மாவீரர்களைத் தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை.
கடந்த காலங்களில் நினைவிடங்கள் உடைக்கப்பட்ட, கொடிகள் அறுத்தெறியப்பட்ட வரலாறுகளையும் மாற்றி பூரணமாக நினைவேந்தல் உரிமையை வழங்கியது எமது அரசே.
நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புத் தரப்பிடம் இருக்கின்ற மாவீரர் துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கான அறிவுறுத்தல்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் சில துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
அதேபோல் வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி படிப்படியாக இடம்பெறும். அதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை.
அண்மையில் வன்னி நிலப்பரப்பில் இராணுவத்திடம் இருந்த ஒரு பகுதி காணி விக்கப்பட்ட நிலையில் அதனை உரியவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன்.
எமது அரசு நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்காகப் புதிய அரசமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றது.
அதைப் பொறுக்க முடியாத சிலர் தெற்கிலும் வடக்கிலும் இருக்கின்ற நிலையில் அவர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நினைப்பில் இருக்கின்றார்கள்.
அண்மையில் திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்ட குழப்பங்களுக்குப் பின்னால் இனவாத சக்திகளின் செயற்பாடுகள் இருக்கின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களின் நோக்கம் மக்களை வாழவைப்பது அல்ல. தமது அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக் கொண்டு நாட்டைச் சூறையாடுவதே இவர்களின் நோக்கம்.
இதை நான் விலாவரியாகக் கூற வேண்டிய தேவையில்லை. கடந்த காலங்களில் நாட்டை எப்படி ரணில், ராஜபக்ஷக்கள் சூறையாடினார்கள் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். ரணில், ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியமைக்க எமது மக்கள் இடமளிக்கமாட்டார்கள். ஆகவே, எமது அரசை வீழ்த்துவதாகக் கூறிக்கொண்டு இனங்களுக்கிடையில் முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதற்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் பலவிதமான செயற்பாடுகளைச் செய்வார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்." - என்றார்.