தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
“ இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், கனடாவில் வாழும் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என தூதுவரிடம் சுட்டிக்காட்டினேன் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கனடா தூதுவர்,
“ புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை , இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.” என்று தெரிவித்தார் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.