மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும். எனினும், அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செயல்படுதல் பலவீனமாக உள்ளது என்றும், இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாது என்றும் நாங்கள் நினைத்தோம்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் இரண்டாவது அதிகாரத்தின் கீழ் செயற்படுவதே மிகவும் வலுவானது. அதனால்தான் எதிர்க்கட்சி அவசர கால சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியது. அதனால்தான் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தோம்.
ஏனென்றால் இது போன்ற ஒரு அனர்த்தத்திற்கு முகங்கொடுக்க சாதாரண சட்டம் மாத்திரம் போதாது. இது போன்ற ஒரு அனர்த்தத்தில், சாதாரண சட்டத்தை விட உயர்ந்த சட்டம் நமக்குத் தேவை. அதன்படிதான், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தை நியமிக்க முடியும்.அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேவையான உபகரணங்கள் மற்றம் அதிகாரிகளை ஏனைய இடங்களுக்கு அனுப்ப முடியும்.” எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அதன்படி, மிகவும் பொருத்தமான சட்டமூலம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டம் என்று நாங்கள் முடிவு செய்தோம். எதிர்க்கட்சிகளிடமிருந்து கிடைத்த ஆதரவிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஆனால், இந்தப் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீற மாட்டோம், என்னையோ அல்லது எங்கள் அமைச்சர்களையோ விமர்சிப்பதைப் பற்றி நாங்கள் கவனத்தில் கொள்ள மாட்டோம்.
அவதூறுகளைப் பற்றி பேசவே தேவையில்லை. அவற்றுக்கு சாதாரண சட்டங்கள் உள்ளன.
ஆனால் மக்களை பயமுறுத்தவும்,தவறாக வழிநடத்தவும்,அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் மோதல் சூழ்நிலையை உருவாக்க எவரேனும் முயற்சித்தால், அது இந்த அனர்த்தத்திரிலிருந்து மீள்வதற்கான திட்டத்தைத் தடுத்தால், அந்த விடயத்தில் மாத்திரமே நாம் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துவோம்.” எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கம்பளையில் 1000 பேர் இறந்ததாக ஒரு எம்.பி. கூறினார்.நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற பெயரில் அவர்கள் இங்கே கூறினாலும், வெளியே சென்று அவ்வாறு கூறினால், வழக்குத் தொடுப்பார்கள். அவ்வாறு கூற முடியாது. கம்பளையில் முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள். அவர்கள் தங்களுக்கு கவனக் குறைவு இருப்பதாகவே நினைக்கிறார்கள். அவற்றுக்கு என்றால் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும்.” என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.