இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் கண்டி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அம்மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவால் 35 மாணவர்களும், 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கள நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் மொத்தமாக 232 பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர் காணாமல்போயுள்ளனர்.
ஆயிரத்து 800 வீடுகள் முழுமையாகவும், 13 ஆயிரத்து 44 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
பேரிடரால் கண்டி மாவட்டத்தில் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.
டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
190 பேர் காணாமல்போயுள்ளனர்.
4 ஆயிரத்து 517 வீடுகள் முழமையாகவும், 76 ஆயிரத்து 66 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையால் 6 லட்சத்து 11 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த 21 லட்சத்து 79 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.