கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லனவை, பணி இடைநீக்கம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு மருத்துவ அதிகாரியாக பொறுப்பான பதவியில் இருந்த மருத்துவர் பெல்லன, முன் அனுமதியின்றி ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடப்பட்டதாக சுகாதார அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைகள், பொதுமக்களிடையே சர்ச்சையையும் அமைதியின்மையையும் உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய நேரத்தில் தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல் நிலை தொடர்பான தகவல்களை, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லனவே வெளியிட்டிருந்தார்.
அதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன பணி இடைநீக்கம் செய்யப்பட்டது அநீதியான நடவடிக்கை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“புதிய அரசமைப்பு இயற்றப்படும்போது கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் அவசியம்.
ஏனெனில் மருந்து மாபியா உட்பட சுகாதார சேவையில் நிலவும் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தும் வைத்தியர் ருக்ஷன் பெல்லன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கினார் என்பதற்காகவே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. அநீதியான நடவடிக்கையாகும்.
தரம் குறைவான மருந்து மற்றும் சுகாதாரத்துறையில் நடக்கும் ஊழல், மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அவருக்கு இல்லையா?
தரம் குறைவான ஊசி பயன்பாட்டால் இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் வாழும் உரிமை பறிபோய் உள்ளது. இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
“ இரு மரணங்கள் தொடர்பில் கவலை அடைகின்றோம். அது தொடர்பில் விசாரணை நடக்கின்றது. விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும்.” – என்றார்.