செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம்திகதி, வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில், தலைமைத்துவ பயிற்சிக்காக வருகை தந்திருந்த மாணவிகள் மீது, விமானப்படை மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலை நடத்தியதில், 53 மாணவிகளும், 4 பணியாளர்களுமாக 57 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் இன்று காலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில், சமூக செயற்பாட்டாளர் சாம்பசிவம் உதயன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் செஞ்சோலையில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் , என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.