தாங்கள் நடத்திய ராணுவத் தாக்குதலில், ஈரான் கடற்படைத் தளபதி அலிரெசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
அவருடன் சேர்ந்து ஈரானின் மூத்த கடற்படைத் தளபதிகள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இது குறித்து ஈரான் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ராணுவமும் ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கு ஆசியப் பிராந்தியம் முழுவதும் பரவியுள்ள இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் மற்றும் அமெரிக்க தளங்களையும் சொத்துக்களையும் குறிவைத்து ஈரான், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் கொண்டு 82 அலை தாக்குதல்களை நடத்தி உள்ளன.
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும், ஈராக்கின் இஸ்லாமிய அமைப்பும் ஈரானுடன் இணைந்து கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
சிபிஎஸ் அறிக்கையின்படி, பென்டகன் தனது 82-வது வான்வழிப் பிரிவின் துருப்புகளை மேற்கு ஆசியாவுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வான் படையினரோடு, தரைப்படையினரையும் அனுப்ப பென்டகன் திட்டமிட்டுள்ளதாகவும், கார்க் தீவில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஈரானுக்குள் தரைவழி தாக்குதலை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டாம் என்று அமெரிக்க-இஸ்ரேலிய படைகளுக்கு ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘‘டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் வஞ்சகத்தால் உங்கள் பிள்ளைகளை நரகத்துக்கு அனுப்பாதீர்கள். தரைப்படை ஈரானுக்குள் நுழைய முயன்றால், லட்சக்கணக்கான ஈரான் வீரர்கள் எனும் கடலுக்குள் மூழ்கி மறைந்து போவார்கள்’’ என்று அது எச்சரித்துள்ளது.