தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் மறுத்துவிட்டது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக போர்நிறுத்த திட்டம் குறித்து அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
எனினும், தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கப் போவதில்லை என்பதை ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள், உடனடி போர்நிறுத்தம் மற்றும் அதனை தொடர்ந்து ஒரு விரிவான ஒப்பந்தம் என இரண்டு கட்ட செயல்முறையை முன்வைக்கிறது.
இந்த திட்டம் குறித்து பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், ‘தற்காலிக போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியாது. அதேபோல, இதில் ஒரு முடிவை எடுப்பதற்காக ஈரான் எந்த அழுத்தங்களையும் அல்லது காலக்கெடுவையும் ஏற்காது,” என்று ஈரான் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா, ஈரான் மற்றும் மத்தியஸ்தர்கள் இரு கட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 45 நாள் போர்நிறுத்தத்தைப் பரிசீலித்து வருவதாகவும், இது இறுதியில் மத்திய கிழக்கில் மோதலுக்கு நிரந்தர முடிவைக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரானுக்கு ட்ரம்ப் ஒரு இறுதிக் காலக்கெடுவை வழங்கியுள்ளார்.
இந்த காலக்கெடு செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு முடிவடைகிறது. மேலும், பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், ஓர் உடன்பாடு எட்டப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்தார்.